உக்ரேனில் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் திங்களன்று (24) நடந்த சந்திப்புக்கு பின்னர், இரு தலைவர்களும் ஒரு கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கெடுத்து உரையாற்றும் போது மக்ரோன் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
உக்ரேனில் அமைதியை நிலைநிறுத்துவதற்கான செலவையும் சுமையையும் அமெரிக்கா மட்டும் செலுத்தாமல் ஐரோப்பிய நாடுகளே செலுத்த வேண்டும் என்று இதன்போது ட்ரம்ப் வலியுறுத்தினார்.
பாதுகாப்புச் சுமையை மிகவும் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பா புரிந்துகொண்டதாக பதிலளித்த மக்ரோன், ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவு பற்றிய பேச்சுக்கள் முன்னோக்கி செல்லும் பாதையைக் காட்டியுள்ளன என்றும் கூறினார்.