தற்போது இடம்பெற்று வரும் யாழ். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Sritharan MP) குறித்த கூட்டத்திலிருந்து சற்றுமுன் வெளியேறியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லையென சுட்டிக்காட்டி அவர் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடைய ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் அமளிதுமளியாக உருவெடுத்தது.
வலி வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடையம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்ட போது ஆளும் தரப்பு நாடளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் (Ilankumaran) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Archuna Ramanathan) இடையே குறித்த வாக்குவாதம் ஆரம்பமாகி உச்சக்கட்டத்தை அடைந்து அவர்களது தனிப்பட விடயங்களை முன்னிறுத்தியதாக குறித்த வாக்குவாதம் மாறியது.
குறிப்பாக இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் பெண்களை ஏமாற்றியது, நிதி மோசடிகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான அதிகாரிகள் முன்னிலையில் அநாகரீகமான முறையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குறித்த விவாதத்தை இடை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்திய போதும், ஒருங்கிணைப்பு குழு தலைவர் குறித்த இருவரையும் கட்டுப்படுத்த முடியாது திணறிப்போனார்.
இதனையடுத்து ஒருங்கிணைப்பு குழு தலைவரின் ஆழுமையற்ற நிலையை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூட்டத்தை விட்டு கடும் கோபமாக வெளியேறி சென்றுள்ளார்.