கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என இந்திய உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1974ஆம் ஆண்டு, இந்திய மத்திய அரசு, தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது. இதனையடுத்து குறித்த நடவடிக்கையினால் தமிழக மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
மீன்பிடிக்க உரிமை இருந்த போதிலும், எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சிலர் தாக்குதலில் உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டசபை இதுகுறித்து பலமுறை தீர்மானங்களை நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி, கச்சத்தீவு மீட்புக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறுதியாக விசாரிக்கப்பட்டது. பின்னர், ஜெயலலிதா காலமானதால், அவரது வழக்கு முடிவுக்கு வந்தது. கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு, திமுக தலைமை, டிஆர் பாலுவை புதிய மனுதாரராக சேர்க்க அனுமதி கோரப்பட்டடிருந்த நிலையில் நேற்றையதினம் அதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கின் இறுதி விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில் செம்டம்பர் 15 ஆம் திகதி கச்சதீவு விவகாரத்திற்கு இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.