அமைதி நிலைபேறுவதற்கான சீர்திருத்தங்களை விவாதிக்கும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பிய பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் பதிலடி வழங்கியுள்ளது.
இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, தூதர் பர்வதனேனி ஹரிஷ், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்து, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என்றும் இது எப்போதும் தொடரும் என்றும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் பிரதிநிதியாக கலந்து கொண்ட சையத் தாரிக் பாதெமி, ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் நடைபெறுகிறது எனக் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, ஹரிஷ் இந்த கடுமையான பதிலை வழங்கினார்.
பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவது தேவையற்றது என்றும், சட்டவிரோதமான பயங்கரவாதத்தை முறையாக எதிர்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திலும், பாகிஸ்தான் இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அப்போது கூட, இந்தியா, பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.